|

"பசங்க" படத்தின் மூலம் குடும்பங்களின் இணக்கத்திற்கும் பிணக்கத்திற்கும் குழந்தைகள் எப்படி காரணமாக இருக்கிறார்கள் என்பதைச் சொன்ன பாண்டிராஜ் குழந்தைகளைப் பற்றி மீண்டும் எடுத்திருக்கும் படம் "மெரினா".
தினந்தோறும் ஆயிரக்கணக்கான பேர் வந்துபோகும் மெரினா கடற்கரையில் சுண்டல் விற்று பிழைப்பு நடத்தும் சிறுவர்களைப் பற்றிய கதை. காதலர்கள், பிச்சைக்காரர்கள், மனநலம் பிறழ்ந்தவர்கள் என்று இயன்றவரைக்கும் மெரினாவோடு தொடர்புள்ள ஒவ்வொரு பாத்திரத்தையும் கோர்த்தெடுத்து மணிமாலையாக்கி இருக்கிறார் பாண்டிராஜ்.
கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் சிவகார்த்திகேயன் இயல்பான ஹீரோக்கள் வரிசையில் இடம்பிடிப்பார். அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஓவியாவுக்கு நடிப்பதற்குக் கிடைத்திருக்கும் மற்றொரு வாய்ப்பு.
வலிநிறைந்த வாழ்க்கையை சிறுவயதிலேயே அனுபவிக்க பழகிவிட்ட சிறுவர்கள் அதை எப்படி தங்களது இயல்பான நகைச்சுவையால் எதிர்கொள்கிறார்கள் என்பது படம் முழுக்க இழையோடுகிறது. அவர்களுக்குள் உருவாகும் மனவருத்தங்கள், ஒரேநொடியில் மறைந்துபோவதும் அவர்களால் மட்டுமே இயல்வது.
சிறுமியான தனது மகளை ஆடவைத்து பாடிப் பிழைப்பவர், வீட்டோடு கோபித்துக்கொண்டு வந்து பிச்சையெத்து வாழும் பெரியவர் என்று ஒருபக்கம் கடுமையான சோகம். தனது மகனை கல்லால் அடித்த சிறுவனை தேடிப்பிடிக்கும் காவல்துறை அதிகாரியின் செயல்களோ இன்னொரு பக்கம் சுவாரஸ்யம்.
சிறுவர்கள் ஒவ்வொவருக்கும் ஒவ்வொருவிதமான கனவு இருக்கிறது. ஆனாலும் கல்வியின் அவசியத்தைச் சொல்லி அவர்களைப் பள்ளிக்கு அனுப்பிவைத்து சுபம் போட்டிருக்கிறார் இயக்குநர். எதிர்பார்த்த முடிவுதான் என்றாலும் எல்லோரது விருப்பமும் அதுதானே. ஆனால் பிச்சையெடுப்பதை தவிர்க்க பெரியவர் முடிவுசெய்துவிட்டபிறகு அவரை உயிரோடு விட்டு வைத்திருக்கலாம். காவிய அவலமாக அவரது மரணத்தைக் காட்டியிருக்க வேண்டியிருந்திருக்கத் தேவையில்லை. மரணம் இயல்பானது. மனமாற்றம் அரிதானது அல்லவா?
| ஸ்கோர் போர்ட் |
| டக் அவுட் |
சிங்கிள் |
டூஸ் |
ஃபோர் |
சிக்ஸ் |
| திரைக்குப் பின்னால் : மெரினா |
திரைக்குப்பின்: சென்னை மெரினா கடற்கரையைப் பற்றி எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கான தூண்டுதலை மீரா நாயரின் "சலாம் பாம்பே" படத்திலிருந்து பெற்றாராம் இயக்குநர் பாண்டிராஜ்.
|
|