|
ராகவ் இசையில் கவிஞர் மகுடேசுவரனின் பாடல்கள்.
"அன்பே உன்னை" பாடல் கைதட்டித் தாளம் போடவைக்கும் துள்ளிசை. "காதல்கொண்டேன்" படப்பாடலின் சாயல் சற்றே அங்கங்கே தென்பட்டாலும் ஒரு வெற்றிகரமான இசையமைப்பாளராக ராகவ் மாறுவதற்கான அடையாளங்கள் தெரிகின்றன.
"எண்ணட்டுமா வானத்துல நட்சத்திர..." பாடல் ஒரு கிராமத்துச் சூழலை தனது வரிகளிலியே உருவாக்கியிருக்கிறது. பாடல் வரிகளில் இதுவரை இடம்பெறாத புதிய வார்த்தைகளும் அவை நினைவுறுத்தும் காட்சிகளும் பாவேந்தரின் அழகின் சிரிப்பை வாசித்த அனுபவத்தை வழங்குகின்றன.
உச்சஸ்தானியில் புஷ்பவனம் குப்புசாமி பாடியிருக்கும் "ஊருல உனக்கொரு மேடை..." பாடல் திரைப்படத்தின் கதைப்போக்கை தொட்டுக்காட்டுகிறது. இப்பாடலின் பின்னணி இசையில் ஒலிக்கும் தப்புச்சத்தம் கேட்கும் யாவரையும் சந்நதம் கொள்ள வைக்கும் கொட்டு.
"தேளாகக் கொட்டுதும்மா" பாடல் துள்ளிசையோடு ஒரு டூயட். “கற்றாழைக் காட்டுக்குள் இந்தக் கருவண்டு தேன் தேடுதோ…” என்று உவமையேற்றி எழுதியிருக்கிறார் கவிஞர்.
இசைமைப்பாளராகவும் பாடகராகவும் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கும் ராகவ், ராப் பாடல் ஒன்றை எழுதிப் பாடி தன்னை ஒரு பாடலாசிரியராகவும் அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறார்.
கடைசியாக மகுடேசுவரனின் கவிதைத்தொகுப்பிலிருந்து "யாவரும்" என்ற கவிதை பாடலாகியிருக்கிறது. மெட்டுக்கு பாடல் என்ற வரையறையைத்தாண்டி கவிதையாகவே எழுதும் சவாலை மகுடேசுவரன் ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்றால் ராகவ் கவிதையை பாடலாக்கும் சாவலை ஏற்று சமாளித்திருக்கிறார். மரபுக்கவிதைகள் பாடலாகும் இயல்பை தனக்குள்ளேயேக் கொண்டிருக்கிறது. மரபிலிருந்து விடுபட்ட நவீனக் கவிதைகளை முதல் தடவையாக திரைப்பாடலாகியிருப்பது இப்பாடல் தொகுப்பின் முக்கிய அம்சம்.
 |